கார்த்திகை சோமவாரத்தையொட்டி கோயில்களில் 108 சங்காபிஷேகம்
திருமங்கலம் / மேலூர், நவ. 18: கார்த்திகை சோமவாரத்தினையொட்டி திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. மேலும் கார்திகை மாதம் பிரதோஷ சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதேபோல் மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் கார்த்திகை மாத, சோமவார பிரதோஷம், 108 சங்காபிஷேக சிறப்பு பூஜை வழிபாடு நேற்று நடைபெற்றது.
இதையொட்டி சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தி தேவருக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம், மஞ்சள், பஞ்சகவ்யம் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. பல்வேறு திருத்தலங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் 108 சங்குகளில் நிரப்பப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தி சங்கரலிங்கம் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிரதோஷ மூர்த்திகள் ரிஷப வாகனத்தில் கோயிலை வலம் வந்தனர். பக்தர்கள் கோளறு பதிகம், தேவாரம், திருவாசகம், நந்தியம் பதிகம், சிவபுராணம், சிவன் 108 போற்றி போன்றவற்றை பாராயணம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள், கோயில் அர்ச்சகர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.