பாலமேடு அருகே டூவீலர் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
அலங்காநல்லூர், செப். 18: பாலமேடு பகுதியில் டூவீலர் மோதிய விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி பலியானார். பாலமேடு பகுதியை சேர்ந்தவர் சீனி. இவரது மனைவி செல்லம்மாள் (62). இவர் நேற்று முன்தினம் பாலமேடு - அலங்காநல்லூர் சாலையோரம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அவருக்கு பின்னால் டூவீலரில் வந்தவர் செல்லம்மாள் மீது மோதினார்.
இதில் நிலைதடுமாறி சாலையில் விழுந்த அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த டூவீலரில் வந்தவர் சம்பவ இடத்திலிருந்து தப்பினார். அந்த வழியாக வந்தவர்கள் செலலம்மாளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். பாலமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தியவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.