ரயில்வே தொழிற்சாலை காரணமாக மேம்பால பணிகளில் பின்னடைவு
மதுரை, நவ. 11: ராமேஸ்வரத்திலிருந்து கொச்சி செல்லும் சாலையில் மதுரை - தேனி மார்க்கத்தை தமிழக நெடுஞ்சாலைத்துறையின் தேசிய நெடுஞ்சாலை பிரிவு பராமரித்து வருகிறது. இச்சாலையில் உள்ள ரயில்வே கடவுபாதையை கடக்க கருமாத்தூரில் ரூ.59.38 கோடியிலும், தேனி நகர் பகுதியில் ரூ.92 கோடியிலும், போடி நகர்ப்பகுதியில் ரூ. 7 கோடியிலும் இரு மற்றும் நான்கு வழிச்சாலையுடன் கூடிய மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில், நெடுஞ்சாலைத்துறை சார்ந்து பால பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கருமாத்தூர் மற்றும் தேனி நகர் ஆகிய இடங்களில் ரயில்வே பாலம் சென்னை நேப்பியர் பாலம் வடிவில் மேம்பாலமாகவும், போடியில் சாதாரண இரும்பு கர்டர் மேம்பாலமாகவும் கட்டி இணைக்கப்பட உள்ளன.
இதில், கருமாத்தூர் கர்டர் பாலத்தை இணைக்கும் பணிகள் நடக்கின்றன. அதேநேரம், தேனி மற்றும் போடி பகுதிகளில் உள்ள ரயில்வே பால பணிகளில் பின்னடைவு ஏற்பட்டு, நீண்ட இழுபறிக்கு பின் தொடங்கியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘சம்பந்தப்பட்ட இடங்களில் ரயில்வே பாலத்திற்கான கட்டுமானம் அரக்கோணத்தில் உள்ள ரயில்வே தொழிற்சாலையில் தொடங்கி உள்ளது. அங்கு, ஒவ்வொரு கட்டங்களிலும் பாலத்தின் கட்டுமானம் மற்றும் அதன் தாங்கும் திறன் குறித்த சோதனை நடத்தப்படும். அவை முடிந்தபின் இங்கு கொண்டுவரப்படும். அதன்பின் பாலத்தில் பொருத்த தடையின்மை சான்றிதழ் பெறப்பட்டு பணிகள் நடக்கும்’ என்றனர்.