ஓடும் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு பயணிகள் இருவர் படுகாயம்
மதுரை, அக். 7: மதுரையில், ஓடும் ஆட்டோவில் இருந்து தவறி விழுந்த டிரைவர் பரிதாபமாக பலியானார். அதிலிருந்த இரு பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரன்(50). ஆட்டோ டிரைவரான இவர், நேற்று மாலை அந்த பகுதியை சேர்ந்த 2 பயணிகளை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஆரப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் பெரியார் பஸ் நிலையம் அருகே எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் வந்தபோது, பாலத்தில் வந்த நபர் மீது மோதாமல் இருப்பதற்காக ஆட்டோவை இடதுபுறமாக திருப்பியுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையோர தடுப்பில் மோதியது.
அப்போது, நாகேந்திரன் எதிர்பாராதவிதமாக பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணித்த திருப்பூரை சேர்ந்த யசோதை உள்ளிட்ட 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, மதுரை அரசு மருத்துவமனையல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நாகேந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து டவுன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.