மின்சாரம் திருடியோருக்கு ரூ.28.94 லட்சம் அபராதம்
மதுரை, நவ. 6: மதுரையில் மின்சாரம் திருடியோருக்கு, ரூ.28.94 லட்சம் அபராதம் விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. மதுரையை அடுத்த கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2007ல் மின்திருட்டு மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதன்படி, ரூ.86 லட்சத்து 26 ஆயிரத்து 964 மதிப்பிலான மின்சாரத்தை திருடியதன் வாயிலாக அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளான தில்லைராஜ், தங்கராஜ் மற்றும் கனகராஜ் ஆகியோருக்கு எதிராக மின்வாரிய செயற்பொறியாளர் தரப்பில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்பாக நடைபெற்று வந்தது. அரசுத்தரப்பில் மாவட்ட முதன்மை அரசு வழக்கறிஞர் பழனிசாமி ஆஜராகி வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி, மின் திருட்டின் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது உறுதி செய்யப்பட்டதால், மூவரும் இணைந்து ரூ.28 லட்சத்து 94 ஆயிரத்து 978ஐ அபராதமாக செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.