2ம் நாளாக நீடித்த வருவாய் துறையினரின் காத்திருப்பு போராட்டம்
மதுரை, நவ. 28: கருணை பணி நியமன உச்சவரம்பை 5 சதவீதமாக குறைத்ததை ரத்து செய்து, 25 சதவீதமாக்க வேண்டும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். துணை ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பட்டியலை வெளியிட வேண்டும். பட்டா மாறுதலுக்கான அதிகாரம் பழைய நிலையிலேயே தொடர ேவண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், இரண்டாம் நாளாக நேற்றும் பணி பணிபுறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மதுரை மாவட்டத்திலுள்ள வருவாய் துறை சார்ந்த அலுவலகங்கள் மற்றும் விராட்டிபத்துவில் உள்ள மேற்கு தாலுகா, திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் தாலுகா, கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு தாலுகா, ஒத்தக்கடை நரசிங்கத்தில் உள்ள கிழக்கு தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் சுமார் 600க்கும் மேற்பட்டோர் நேற்று பணிகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலத் தலைவர் முருகையன், மாவட்டத் தலைவர் கோபி, செயலாளர் முகைதீன் அப்துல்காதர், பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் கிழக்கு தாலுகாவில் தாசில்தார் கிளமெண்ட் சுரேஷ் தலைமையில் ஏராளமானோர் இந்த காத்திருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தால், வருவாய்த்துறை அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன.