கைக்குழந்தையுடன் இளம்பெண் மாயம்
கிருஷ்ணகிரி, டிச.5: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி தோட்டகணவாய் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி வனிதா(23). இவர்களுக்கு ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, சண்டை போட்டு வந்துள்ளனர். நேற்று முன்தினம் காலை, வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்ட வனிதா, குழந்தையுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி நேற்று முன்தினம் இரவு, பாலகிருஷ்ணன் வேப்பனஹள்ளி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையுடன் மாயமான வனிதாவை தேடி வருகின்றனர்.
Advertisement
Advertisement