கோயில் ஊழியர்கள் கமிஷனரிடம் புகார் மனு
கோவை, ஆக.27: கோவை வடவள்ளியில் கருப்பராயன் கோயில் உள்ளது. இங்கு பூசாரி மற்றும் கோயில் ஊழியர்களாக வேலை பார்ப்பவர்கள் நேற்று கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், வடவள்ளியில் உள்ள கருப்பராயன் கோயிலில் வேலை பார்த்த பூசாரி ஒருவர் ஓய்வு பெற்று விட்டார். அவரது வாரிசுக்கு வேலை கேட்டார். ஆனால், கோயில் நிர்வாகம் அவருக்கு வேலை கொடுக்கவில்லை.
இதனைத்தொடர்ந்து வேறொருவர் பூசாரியாக வேலைக்கு சேர்ந்தார். ஆனால், இதனை விரும்பாத சிலர் அவரை கோர்ட் மூலம் ஆர்டர் வாங்கி வேலைக்கு வா என தெரிவித்தனர். அதன்பின்பு அவர் கோர்ட் ஆர்டர் வாங்கி நேற்று முன்தினம் மீண்டும் வேலைக்கு சேர்ந்தார். இதனால் காழ்ப்புணர்ச்சியில் சிலர் கோயில் ஊழியர்கள் அனைவரையும் தகாத வார்த்தையால் பேசி, பணி செய்ய விடாமல் தடுக்கின்றனர். கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.