காளப்பட்டி, மருதமலை, இருகூரில் புதிய போலீஸ் ஸ்டேசன்கள் அமைக்க அரசுக்கு கருத்துரு
கோவை, ஆக. 20: தமிழகத்தின் தொழில் நகரமாக விளங்கும் கோவையில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர். இதுதவிர இங்குள்ள கல்வி நிலையங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர்.
கோவை மாநகரில் 20 சட்டம்- ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள், 4 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் எண்ணிக்கை போதாது என்றும், கூடுதல் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து சுந்தராபுரம், கரும்புகடை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் புதிய போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இதுதவிர துடியலூர், வடவள்ளி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களும் மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தற்போது கோவை மாநகருக்கு காளப்பட்டி, இருகூர், மருதமலை ஆகிய பகுதிகளை மையமாகக்கொண்டு புதிய போலீஸ்நிலையம் அமைக்க கோவை மாநகர போலீசார் சார்பில் அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.