மூதாட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டு காரை அடித்து உடைத்த நபர்கள்
கோவை, ஆக. 20: மூதாட்டிகளிடம் தகராறில் ஈடுபட்டு, காரின் கண்ணாடியை அடித்து உடைத்த நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கணபதி ஸ்ரீதேவி நகர் 3வது வீதியை சேர்ந்தவர் சசிதா (49). இவருடன் இவரது தாயார் பிருந்தா மற்றும் சித்தி கோமல் ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சசிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியின் காரணமாக சென்னை சென்றார்.
வீட்டில் தயார் பிருந்தா, சித்தி கோமல் மட்டும் தனியாக இருந்தனர். அப்போது அவரது வீட்டிற்கு வந்த 2 பேர் மது போதையில் வீட்டின் கேட்டை உதைத்து, கல்லால் அடித்து கொண்டு இருந்தனர். சத்தத்தை கேட்டு பிருந்தா, கோமல் வெளியே வந்து அவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரின் கண்ணாடியை 4 பக்கமும் கல்லால் அடித்து உடைத்தனர்.
பின்னர் மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிருந்தா, கோமல் இதுகுறித்து சென்னையில் உள்ள சசிதாவிற்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர். அவர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.