வெள்ளலூர் குப்பை கிடங்கில் நள்ளிரவில் தீ 5 மணி நேரம் போராடி அணைத்தனர்
கோவை, செப். 18: வெள்ளலூர் குப்பை கிடங்கில் நள்ளிரவில் ஏற்பட்ட தீயை சுமார் 5 மணி நேரம் போராடி அணைத்தனர். கோவை வெள்ளலூரில் உள்ள குப்பைக்கிடங்கில், மாநகரில் தினமும் சேகரமாகும் 1,100 டன் குப்பை கொட்டப்படுகிறது. இங்கு வெயிலின் தாக்கம் மற்றும் சில சமூக விரோதிகளின் செயல்களால் அடிக்கடி குப்பை தீப்பற்றி எரிவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் திடீரென குப்பை கிடங்கில் தீப்பற்றி எரிந்தது. இதனால், அந்த பகுதியில் புகைமூட்டம் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையங்களுக்கும், மாநகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், கோவை தெற்கு, கிணத்துக்கடவு, கவுண்டம்பாளையம், கோவைப்புதூர் ஆகிய 4 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றன. சுமார் 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து குப்பையில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 5 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போத்தனூர் போலீசார் நாச வேலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர்.