காந்திபுரம் சிக்னலில் யாசகம் பெற்ற 16 பேர் மீட்பு
கோவை. செப். 17: கோவையில் கணபதி, மேட்டுப்பாளையம் ரோடு, எல் அண்டி பைபாஸ், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் சிக்னல்களில் நின்று கொண்டு கார் கண்ணாடியை துடைப்பது, பொருட்களை வாங்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இன்னும் சிலர் கையில் குழந்தையை வைத்து கொண்டு யாசகம் எடுத்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து சிக்னல்களில் யாசகம் கேட்டு தொந்தரவு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார்.
அதன்படி, காந்திபுரம் காவல் நிலைய போலீசார் கடந்த 2 நாட்களாக காந்திபுரம் சுற்று பகுதிகளில் உள்ள சிக்னல்களில் நின்று கொண்டு யாசகம் பெற்றவர்களை பிடித்தனர். அந்த வகையில் ஆண்கள், பெண்கள், முதியவர் என மொத்தம் 16 பேரை போலீசார் பிடித்தனர். இவர்களை மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் காப்பகங்களில் சேர்க்க போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, கோவையில் உள்ள காப்பகத்தில் 16 பேரும் சேர்க்கப்பட்டனர்.