அன்னூர் அருகே பரபரப்பு பிக்கப் வாகனத்தின் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி
அன்னூர், நவ.6: அன்னூர் கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் பிக்கப் வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் வாலிபர் பலியானார். இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்குமார் (25). இவர் புளியம்பட்டியை சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் பிக்கப் வாகன ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். சதீஷ்குமார் சத்தியமங்கலத்தில் இருந்து வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு கேரளாவுக்கு சென்று வாழைக்காய் லோடை இறக்கியுள்ளார். பின்னர் அன்னூர் வழியாக புளியம்பட்டி திரும்பி உள்ளார்.
அப்போது அன்னூர் அருகே கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் அல்லிக்குளம், குளம் பகுதியில் சென்றபோது சத்தியில் இருந்து கோவை நோக்கி வந்த பாயிண்ட் - பாயிண்ட் அரசு பேருந்து பிக்கப் வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சதீஷ்குமாரை ஆம்புலன்ஸ் மூலம் அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே சதீஷ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகள் லேசான காயம் அடைந்த நிலையில் அன்னூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இதனையடுத்து கோவை மண்டல பொது மேலாளர் செல்வகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து குறித்து கேட்டு அறிந்தார்.
இதுகுறித்து அன்னூர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விபத்து எவ்வாறு நடந்தது என்பது குறித்து ஆய்வு செய்து வழக்குஒபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பிக்கப் வாகனம் மற்றும் அரசு பேருந்தை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கிரேன் மூலமாக அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.