அழுகிய நிலையில் முதியவர் சடலம் மீட்பு
கோவை, ஆக. 19: கோவை உக்கடம் பிகே செட்டி வீதியை சேர்ந்தவர் பெனடிக் ஜோசப் (66). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்தார். இவரது உறவினர் செட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் நிக்ஷன் (52). இவர் அடிக்கடி சென்று பெனடிக் ஜோசப்பை சந்தித்து வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 10 நாட்களாக பெனடிக் ஜோசப்பை சந்திக்க செல்லவில்லை. நேற்று முன்தினம் பெனடிக் ஜோசப்பின் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் நிக்ஷனுக்கு போன் செய்து பெனடிக் ஜோசப் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் அவர் உடனே பெனடிக் ஜோசப் வீட்டிற்கு சென்று பார்த்தார். அப்போது பெனடிக் ஜோசப் அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உக்கடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பெனடிக் ஜோசப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.