திருக்காம்புலியூர் அருகே குட்கா விற்றவர் கைது
கரூர், ஆக. 21: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் அருகே குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா விற்பனை செய்வது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார்களும், மதுவிலக்கு போலீசார்களும் கடந்த சில மாதங்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வழக்கு பதிந்து வருகின்றனர்.
மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கரூர் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காம்புலியூர் ரவுண்டானாவை ஒட்டியுள்ள பகுதியில் குட்கா பொருட்கள் வைத்து விற்பனை செய்யப்படுவதாக டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் நடத்திய சோதனையில் 1 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக செந்தில், என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரிக்கின்றனர்.