ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய், கொப்பரை ஏலம்
க.பரமத்தி, செப்.30: ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் கொப்பரை கிலோவுக்கு ரூ.12குறைந்து ஏலம் போனது. கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி, கரூர் ஆகிய இரண்டு ஒன்றிய பகுதிகளான புன்னம், அத்திப்பாளையம், குப்பம், முன்னூர், தென்னிலை, மொஞ்சனூர், கார்வழி, அஞ்சூர், மற்றும் புகழூர், வேலாயுதம்பாளையம், நொய்யல், சேமங்கி, நடையனூர், மறவாபாளையம், தவிட்டுப்பாளையம், திருக்காடுதுறை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ஊர்களில் அதிகளவில் விளையும் தேங்காயை விவசாயிகள் தங்களின் தேவைக்கு போக மீதமுள்ளவற்றை சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திங்கள்தோறும் நடைபெறும் ஏலத்தில் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இதில் தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன. மொத்தம் 14 ஆயிரம் தேங்காய்கள் ஏலம் விடப்பட்டது. ஒரு கிலோ தேங்காய் குறைந்தபட்சமாக ரூ.62க்கும், ஒரு கிலோ தேங்காய் அதிகப்பட்சமாக ரூ.70க்கு ஏலம் போனது. கடந்த வார விலையில் மாற்றம் இல்லாமல் போனது. அடுத்து கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. சுமார் 200 மூட்டைகளில் கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டு ஏலம் விடப்பட்டதில் ஒரு கிலோ சராசரி விலையாக ரூ.216, ஒரு கிலோ கொப்பரை தேங்காய் முதல் ரகம் அதிக விலையாக ரூ.221க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.12குறைந்து ஏலம் போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.