ஐஐடியில் சார்பில் நடந்த ஸ்டார்ட் அப் போட்டியில் காரைக்கால் என்ஐடி முதல் பரிசு
காரைக்கால், ஆக.15: இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை மற்றும் விப்ரோ அறக்கட்டளை நிதிஉதவியுடன் தாக்கம் சவாலுக்கான தொடக்க யோசனைகள் என்ற தலைப்பில் கடந்த 9ம் தேதி நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் காரைக்காலில் உள்ள புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக் கழக மாணவர்களால் இயற்கை அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்தி நதிகளில் பிளாஸ்டிக் மற்றும் நுண்ணிய பிளாஸ்டிக்கை அகற்றுதல் (பப்பர் சிஸ்டம்)\” என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம் முதல் பரிசு (ரூபாய் ஒரு லட்சம்) பெற்று சாதனைப் படைத்துள்ளது. இதில் 2000 விண்ணப்பதாரர்களில், 701 குழுக்கள் ஆரம்பத் திரையிடலைத் தாண்டி முன்னேறியது. மேலும் 20 அணிகள் மட்டுமே தங்களின் கருத்துக்களை நிரூபிக்க ரூ.50,000 நிதியுதவிப் பெற்றது. இவற்றில், தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரியின் மாணவர்கள் நீர் கருப்பொருளில் முதல் இடத்தைப் பிடித்தனர்.
இச்சாதனையை புரிந்தமைக்காக ஆராய்ச்சி மாணவி சுவலட்சுமி ஆனந்தன், இறுதியாண்டு இளங்கலை கட்டிடக் பொறியியல் மாணவர்கள் முகேஷ், ராஜராஜன் மற்றும் விஷ்ணுவர்தன் மற்றும் குழுவின் வழிகாட்டி முனைவர் சிவக்குமார் ராமலிங்கம், உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் (கட்டிடக் பொறியியல்) இவர்கள் அனைவருக்கும் கழகத்தின் சார்பில் இயக்குனர் முனைவர் மகரந்த் மாதவ் காங்ரேகர், கழகத்தின் பதிவாளர் முனைவர் சுந்தரவரதன் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.