கன்னியாகுமரி கடற்கரை சாலையில் ஆக்ரமிப்பு கடைகள் மீண்டும் அகற்றம் தீக்குளிக்க போவதாக வியாபாரி மிரட்டியதால் பரபரப்பு
கன்னியாகுமரி, நவ. 26: கன்னியாகுமரி கடற்கரை சாலையின் இருபுறமும் காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை நடைபாதையை ஆக்ரமித்து ஏராளமான கடைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரங்களில் உள்ள நடைபாதைகளில் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த ஆக்ரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி நகராட்சி ஆணையர் கண்மணி உத்தரவின்பேரில், நகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அப்துல் காதர், பொறியாளர் பழனி, சுகாதார ஆய்வாளர் அந்தோணி முன்னிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன் கன்னியாகுமரி கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் மற்றும் காமராஜர் மணிமண்டபம், காட்சி கோபுரம் ஆகிய இடங்களில் உள்ள நடைபாதைகளில் இருந்த ஆக்ரமிப்பு கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
இந்நிலையில் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயசந்திரன், இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் நேற்றும் ஆக்ரமிப்புகளை அகற்றினர். அப்போது நடைபாதை வியாபாரிகள், பாசி, மாலை, சங்கு உள்ளிட்ட பொருட்களை விற்பவர்கள் கடைகளை அகற்றினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூறி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒரு வியாபாரி தனது கடையை அகற்றினால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்தார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இருப்பினும் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்ரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.