சுமைதூக்கும் தொழிலாளி தவறி விழுந்து பலி
நாகர்கோவில், நவ. 21: நாகர்கோவில் போலீஸ் ஸ்டேசன் ரோடு கிழக்கு தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (57) சுமைதூக்கும் பணியாளர். இவர் சம்பவத்தன்று அழகர்கோணம் பகுதியில் உள்ள ஒருவரது வீட்டில் மாட்டு தீவனம் இறக்க சென்றார். தலையில் மாட்டு தீவன மூடையை எடுத்துக்கொண்டு செல்லும்போது, கால் தடுமாறி கீழே விழுந்தார். இதில் ராஜசேகருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை சுசீந்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் மாலை ராஜசேகர் இறந்தார். இது குறித்து அவரது மனைவி ஜெயகுமாரி, வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.