நெய்யாற்றின்கரை அருகே சுற்றுலா பயணிகள் மீது பீர் பாட்டில் வீச்சு போதை ஆசாமி கைது
திருவனந்தபுரம், அக். 16: கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை அருகே சுற்றுலா பயணிகள் மீது பீர் பாட்டில் வீசிய போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். திருவனந்தபுரம் மாவட்டம் நெய்யாற்றின்கரை அருகே உள்ள பொழியூர், ஒரு சுற்றுலா பகுதியாகும். ஆறும், கடலும் கலக்கும் இந்த இடத்தை சுற்றிப் பார்ப்பதற்காக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு உல்லாச படகு சவாரியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இப்பகுதியைச் சேர்ந்த சனூஜ் (34) என்ற வாலிபர், குடிபோதையில் படகில் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பயணியின் கையைப் பிடித்து இழுத்துள்ளார். அதை பார்த்த மற்ற பயணிகள் அவரை கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த சனூஜ் திடீரென தன்னிடம் இருந்த பீர் பாட்டிலை தூக்கி வீசினார். இதில் படகில் இருந்த மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அல்கர்தாஸ் என்பவரின் 3 வயது சிறுமியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிறுமி நெய்யாற்றின்கரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையே சனூஜை அந்த பகுதியினர் பிடித்து பொழியூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.