வெளிநாட்டில் உள்ள மனைவியுடன் போனில் தகராறு மதுவில் ஆசிட் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை
தக்கலை, அக். 11: குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கூனிமாவிளை பகுதியை சேர்ந்தவர் பிலிப் (51). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா. இவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 8ம் தேதி இரவு தனது மனைவியுடன் பிலிப் செல்போனில் பேசினார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுஜாதா போனை துண்டித்து விட்டார். இதில் மனம் உடைந்த பிலிப், மதுவில் ஆசிட் கலந்து குடித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை அழகிய மண்டபத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிலிப், நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.