குமரியில் பொதுவிநியோக குறைதீர் முகாம்கள் நாளை நடக்கிறது
நாகர்கோவில், ஆக.8: குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுவிநியோக திட்ட செயல்பாட்டில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைபாடுகளை உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், சிறப்பு மக்கள் குறைதீர்முகாம் நாளை(9ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் வைத்து நடைபெற உள்ளது. முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், இறந்த குடும்ப தலைவர்களின் பெயர் மற்றும் புகைப்பட மாற்றம் செய்தல், பிஎச்எச் அட்டையில் பெண் குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் மற்றும் நகல் ரேஷன்கார்டு கோரும் மனுக்கள், கைபேசி எண் மற்றும் மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களும் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.