நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
நாகர்கோவில், அக். 4: நாகர்கோவிலில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். நாகர்கோவில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் போலீசார் வடசேரி உழவர் சந்தை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வாலிபர் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். உடனே அவரது உடமைகளை சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 40 கிராம் கஞ்சா இருந்தது. அதனை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பகுதியை சேர்ந்த அஜித்(27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Advertisement
Advertisement