குமரியில் மழை நீடிப்பு: குழித்துறையில் 41 மி.மீ பதிவு
நாகர்கோவில், நவ.11: குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வரும் நிலையில், குழித்துறையில் அதிகபட்சமாக 40.8 மி.மீ மழை பெய்திருந்தது. மன்னார் வளைகுடா பகுதியில் வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, குமரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. அந்த வகையில் மாவட்டம் முழுவதும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால், மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் தணிந்துள்ளது. நேற்று பகல் வேளையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட பல பகுதிகளில் இருள் சூழ்ந்திருந்தது. தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. மாலையிலும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
நேற்று காலை வரை அதிகபட்சமாக குழித்துறையில் 40.8 மி.மீ மழை பெய்திருந்தது. நாகர்கோவில் 4, கன்னிமார் 6.4, பாலமோர் 10.4, தக்கலை 8.4, குளச்சல் 12.2, இரணியல் 8.2, அடையாமடை 29, குருந்தன்கோடு 15.4, கோழிப்போர்விளை 5.4, மாம்பழத்துறையாறு 10.3, ஆனைக்கிடங்கு 10, சிற்றார்-1ல் 20.2, சிற்றார்-2ல் 14.4, களியல் 15, குழித்துறை 40.8, பேச்சிப்பாறை 9.2, பெருஞ்சாணி 13.6, புத்தன் அணை 12.4, சுருளோடு 11.4, திற்பரப்பு 19.8, முள்ளங்கினாவிளை 33.8 மி.மீட்டரும் மழை பெய்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 43.19 அடியாகும். அணைக்கு 184 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. அணை மூடப்பட்டிருந்தது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.7 அடியாகும். அணைக்கு 381 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 9.41 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 200 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-2ல் 9.51 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. பொய்கையில் 34.4 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 1 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 42.4 அடியாகும். அணைக்கு 2 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. முக்கடல் அணை நீர்மட்டம் 24.5 அடியாகும்.