உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: மேயர் மகாலட்சுமி யுவராஜ் வழங்கினார்
காஞ்சிபுரம், செப்.30: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் சமுதாயக் கூடத்தில் `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது. ஆணையர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கி, `உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை தொடங்கி வைத்தார். பின்னர், முகாமில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு, பதிவு செய்வதையும் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு, முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் காக்கும் வகையில் மருத்துவ சேவைகள் வழங்க அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ முகாமினையும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் பெறப்படுவதையும் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். மேலும், இம்முகாமில் துறை சார்ந்த சான்றிதழ் உடனடியாக சரி பார்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டு, மருத்துவ காப்பீடு, வருவாய்த்துறை சான்றிதழ்களை வழங்கினார். இதில், காஞ்சிபுரம் வட்டாட்சியர் ரபிக், மாநகராட்சி கவுன்சிலர்கள் சரளா சம்பத், சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.