அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் இந்திய அரசியலமைப்பு நினைவு தூணுக்கு மாலை அணிவித்து மாணவர்கள் மரியாதை
வாலாஜாபாத், நவ.29: வாலாஜாபாத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள இந்திய அரசியலமைப்பு நினைவு தூணுக்கு மாஅலை அணிவித்து மாணவர்கள் மரியாதை செலுத்தினர். வாலாஜாபாத் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 1975ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் முகவுரை நினைவு தூண், அரசியலமைப்பு தினத்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. மேலும் அந்தத் தூணில் அரசியலமைப்பின் 78வது ஆண்டு நினைவு விழாவையொட்டி, நாட்டின் அடிப்படை மதிப்புகளான சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் நீதி போன்ற கொள்கைகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த நினைவு தூண் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. வாலாஜாபாத் வரலாற்று ஆய்வாளர் அஜய்குமார் கூறுகையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தூணை தமிழக அரசு பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனையடுத்து, வாலாஜாபாத் அரிமா சங்கம் மற்றும் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி இணைந்து நினைவு தூண் மலர்களால் அலங்கரித்து, மாணவர்களுக்கு இந்திய அரசியலமைப்பு முகவுரை தூணில் சிறப்பு அம்சங்கள் குறித்து விளக்கி கூறப்பட்டது. இந்நிகழ்ச்சியில், வாலாஜாபாத் லயன்ஸ் சங்கம் சார்பில் தலைவர் தனராஜன், செயலாளர் ராம், பொருளாளர் தீனதயாளு, உறுப்பினர்கள் காயம்மாள், சேகர், சசிகுமார், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ்குமார், பேரூராட்சி மன்ற கவுன்சிலர் வெங்கடேசன் உள்ளிட்ட வரலாற்று ஆர்வலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.