காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி சிறப்பு பூஜைகள்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
காஞ்சிபுரம், செப்.25: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழாயொட்டி, உற்சவர் காமாட்சியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, லட்சுமி - சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மகா சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா சண்டி ஹோமத்துடன் கடந்த 22ம்தேதி தொடங்கியது. தொடர்ந்து, மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டது. மாலை லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவர் காமாட்சியம்மன் கோயில் அலங்கார மண்டபத்தில் இருந்து மங்கல மேள வாத்தியங்களுடன் சிறப்பு அலங்காரத்தில் நவராத்திரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும், வயலின் வித்வான் ஆர்.குமரேஷ் குழுவினரின் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவையொட்டி, கோயில் கோபுரங்கள் வண்ண மின் விளக்குகளாலும், நவராத்திரி மண்டபம் முழுவதும் வண்ண மலர்கள் மற்றும் காய்கறிகளாலும் அலங்கரிக்கபட்டிருந்தது. நவராத்திரி விழாவையொட்டி தினசரி காமாட்சியம்மன் நவராத்திரி மண்டபத்துக்கு எழுந்தருள்வதும், தினசரி சூரசம்ஹாரமும், பக்தி இன்னிசை கச்சேரிகளும் நடைபெறுகிறது. வரும் 30ம்தேதி துர்காஷ்டமியையொட்டி, துர்க்கையாக காமாட்சியம்மன் அலங்காரமாகி சூரசம்ஹாரம் நடைபெறுவதுடன், சூரசம்ஹாரம் நிறைவு பெறுகிறது. அக்.1ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் காமாட்சியம்மன் அருள்பாலிக்கவுள்ளார். அக்.2ம்தேதி விஜயதசமி திருநாளன்று நவ ஆவர்ண பூஜையுடனும், அக்.4ம்தேதி அம்மன் ஊஞ்சல் உற்சவத்தோடும் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலயத்தின் காரியம் ந.சுந்தரேசன், உதவி ஆணையர் ஆர்.ராஜலட்சுமி, கோயில் மணியக்காரர் சூரியநாரயணன், கோயில் ஸ்தானீகர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.