தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருவதால் வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் பறவைகள் வரத்து அதிகரிப்பு: பராமரிப்பு பணிகள் தீவிரம்
மதுராந்தகம், அக்.23: தொடர் மழையால் வேகமாக நிரம்பி வருவதால் வேடந்தாங்கல் சரணாலய ஏரியில் பறவைகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் இனப்பெருக்கத்திற்காக ஆஸ்திரேலியா, சைபீரியா, கனடா, இலங்கை, பர்மா, உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 21 வகையான நத்தை கொத்தி நாரை, கூழைக்கடா, வர்ண நாரை, நீர்காகம், பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், கருப்பு அரிவாள் மூக்கன், ஊசி வாத்து, நாமகோழி, வக்கா உள்ளிட்ட பறவைகள் வந்து ஏரியில் உள்ள மரங்களில் தங்கி கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்துவிட்டு குஞ்சு பறவைகளுடன் தங்களது சொந்த நாடுகளுக்கு ஏப்ரல் மே மாதங்களில் செல்வது வழக்கம்.
தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் பகுதியில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சரணாலயம் ஏரிக்குச் செல்வதால் இந்த ஏரி கிடுகிடுவென நிரம்பி வருகிறது. ஏரியில் தண்ணீர் நிரம்பி, ஏரியில் உள்ள மரங்களை சூழ்ந்து பறவைகளுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான நத்தை குத்தி நாரை, 50க் கும் மேற்பட்ட பாம்பு தாரா, நூற்றுக்கும் மேற்பட்ட வெள்ளை அரிவாள் மூக்கன், 200க்கும் மேற்பட்ட நீர் காகம் உள்ளிட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் தற்போது வந்து தங்கியுள்ளன. இதனால் ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் பறவைகள் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. புதிதாக வந்து தங்கியுள்ள நத்தை குத்தி நாரை பறவைகள் ஏரியில் உள்ள செடிகொடிகளை பறித்து, கூடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்தப் பறவைகளைக் காண ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளளதால் சரணாலயத்தில் பராமரிப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.