சைக்ளோத்தான் போட்டி: 2500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
மாமல்லபுரம், செப்.22: இந்திய சைக்கிள் கூட்டமைப்பு உதவியுடன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எச்சிஎல் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சைக்ளோத்தான் 2025 போட்டியை கிழக்கு கடற்கரை சாலையில் நடத்த திட்டமிட்டது. அந்த வகையில், சைக்ளோத்தான் போட்டி கானத்தூர் மாயாஜால் திரையரங்கம் அருகே நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது.
இதில், வீரர், வீராங்கனைகள் ஆர்வமாக சைக்கிளை மிதித்துக்கொண்டு கோவளம், நெம்மேலி, பட்டிப்புலம், தேவனேரி கிழக்கு கடற்கரை சாலை வழியாக மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரிக்கு அருகே வந்து அங்குள்ள வளைவில் திரும்பி மீண்டும் மாயாஜால் திரையரங்கம் அருகே போட்டி நிறைவு பெற்றது. இதில், 15 கிமீ, 25 கிமீ, 50 கிமீ என 3 பிரிவுகளாக பிரிந்து பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.
முன்னதாக, சைக்ளோத்தான் போட்டியை முன்னிட்டு மாயாஜால் திரையரங்கம் முதல் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி வரை கிழக்கு கடற்கரை சாலையில் அதிகாலை 5 மணி முதல் காலை 9.30 மணி வரை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, அதற்கு மாறாக பூஞ்சேரி ஓஎம்ஆர் சாலை-அக்கரை இணைப்பு சாலையினை வாகனங்கள் செல்ல பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. போட்டியையொட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.