தாம்பரம் அரசு மருத்துவமனையில் காவலாளி விரலை கடித்த முதியவரால் பரபரப்பு
தாம்பரம், நவ.21: தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காவலாளி விரலை கடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லாவரம் அடுத்த பம்மல், பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் அம்பிகாபதி (56). இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் உள்ள தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் நிறுவன காவலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் பணியில் இருந்தார். அப்போது கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த சின்னா (59) என்பவர் தனது மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றுகூறி ஊசி போடும் அறை எங்கே என்று கேட்டார். அப்போது காவலாளி அம்பிகாபதி தவறான அறையை காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னா காவலாளி அம்பிகாபதியுடன் கைகலப்பில் ஈடுபட்டு அவரது கை விரலை கடித்தார். இதனால் வலி தாங்க முடியாமல் காவலாளி கத்தியதால் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து காவலாளியை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் சின்னாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.