விநாயகர் சதுர்த்தியின்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான நெறிமுறைகள்: கலெக்டர் தகவல்
காஞ்சிபுரம், ஆக.20: காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பரைப்பதற்கான நெறிமுறைகள் குறித்து கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தொன்றுதொட்டு சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களாகிய நமக்கு மிகப்பெரிய கடமை இருக்கிறது. நீர்நிலைகள் (கடல், ஆறு மற்றும் குளம்) நமக்கு குடிநீர் ஆதாரத்தை தருகிறது.
நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாடும்போது, விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான மத்திய மாசு கட்டுப்பாடு வழிகாட்டுதல்களின்படி (www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில்) மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள சர்வதீர்த்த குளம் மற்றும் பொன்னேரிக்கரை ஆகிய இடங்களில் கரைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
எனவே, பொதுமக்களுக்கு கீழ்கண்டவாறு வேண்டுகோள் விடப்படுகிறது. களி மண்ணால் செய்யப்பட்டதும், பிளாஸ்டர் ஆப்பாரிஸ் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலீஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் பாதுகாப்பான முறையில் கரைக்க அனுமதிக்கப்படும். சிலைகளின் ஆபரணங்கள் தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் போன்றவை பயன்படுத்தப்படலாம்.
மேலும், சிலைகளை பளபளப்பாக மாற்றுவதற்கு மரங்களின் இயற்கை பிசின்கள் பயன்படுத்தப்படலாம். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, நீர்நிலைகள் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு வைக்கோல் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மட்டுமே சிலைகள் தயாரிக்க அல்லது சிலைகள், பந்தல்களை அலங்கரிக்க பயன்படுத்த வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத ரசாயன சாயம், எண்ணெய், வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது. சிலைகளின் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை அடிப்படையாக கொண்ட வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது, மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த மக்கக் கூடிய நச்சு கலப்பற்ற இயற்கை சாயங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
சிலைகளை அழகுபடுத்த வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்கள் கொண்ட பொருட்களுக்கு பதிலாக, இயற்கை பொருட்கள் மற்றும் இயற்கை சாயங்களால் செய்யப்பட்ட அலங்கார ஆடைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். விநாயகர் சிலைகளை மாவட்ட நிர்வாகத்தினால் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளின்படி கரைக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவினை சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு, பொதுமக்கள் கொண்டாடப்பட வேண்டும். மேலும், விபரங்களுக்கு மாவட்ட கலெக்டர், போலீஸ் எஸ்பி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோரை அணுகலாம்.
செய்யக்கூடாதவை: சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலைகளைப் பயன்படுத்தக் கூடாது, சிலைகளை அலங்கரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் ரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த இயற்கையாக மக்கக்கூடிய மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை பயன்படுத்துங்கள். சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தன்மையற்ற ரசாயனசாயங்கள், எண்ணெய், வண்ணப் பூச்சுகளை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்தக் கூடாது. அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். வண்ணப்பூச்சுகள் மற்றும் பிற நச்சு ரசாயனங்களை கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பிரசாத விநியோகத்திற்கு மக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும்.
பண்டிகையின்போது, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். பொறுப்புடன் குப்பைகளை பிரித்து அப்புறப்படுத்துங்கள், குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது, அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும், அனுமதி இல்லாத நீர்நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது, எல்இடி பல்புகள் போன்ற சுற்றுச்சூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும். பிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்தக் கூடாது. அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும், ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்தக் வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.