சுதந்திர தினத்தையொட்டி நாளை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
காஞ்சிபுரம், ஆக.14: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின நாளான ஆகஸ்ட் 15ம் தேதி நாளை காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த, கிராம சபை கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும். கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-II, ஜல்ஜீவன் திட்டம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும். மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு-செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்க வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.