காஞ்சிபுரத்தில் விதிமீறி இயங்கிய 178 வாகனங்களுக்கு ரூ.25.93 லட்சம் அபராதம்: வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல்
காஞ்சிபுரம், அக்.8: காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விதிமுறைகளை மீறி இயங்கிய 178 வாகனங்களுக்கு 25 லட்சத்து 93 ஆயிரத்து 271 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி உத்தரவின்படி, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் சிவராஜ் உள்ளிட்டோர் காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
இதில், விதிமீறி அதிக பாரம் ஏற்றிய சரக்கு வாகனங்கள், தகுதிச் சான்று புதுப்பிக்காத ஓட்டுநர் உரிமம், அனுமதி சீட்டு, வரி செலுத்தாத, தார்பாலின் மூடாத, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன் வாகனங்கள் என விதிமீறி இயங்கிய 178 வாகனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வாகனங்களுக்கு வரி, அபராதம் வசூலித்தும், வாகனத்தை சிறை பிடித்தும் அபராதம் வசூலித்தது என ஒரே மாதத்தில் மொத்தமாக ரூ.25 லட்சத்து 93 ஆயிரத்து 271 அபராதம் வசூலிக்கப்பட்டது. அப்போது, விதிமீறும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், தகுதி சான்று, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனம், அதிகளவில் பயணியர் மற்றும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன் தெரிவித்தார்.