தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில் காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை: அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்
காஞ்சிபுரம், அக்.4: தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் சார்பில், காஞ்சிபுரம் காமாட்சி கோ-ஆப்டெக்ஸ்சில் தீபாவளி சிறப்பு சிறப்பு விற்பனையை அமைச்சர் காந்தி துவக்கி வைத்தார்.
கோ-ஆப்டெக்ஸ் என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1935ம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 90 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சேவை புரிந்து வருகிறது. மேலும், வாடிக்கையாளர்களின் மாறிவரும் இரசனை மற்றும் அவர்களின் தேவைகளை அறிந்து கைத்தறி இரகங்களை காமாட்சி கோ-ஆப்டெக்ஸ், காஞ்சிபுரம் விற்பனை நிலையம் சென்ற ஆண்டு தீபாவளிக்கு ரூ.74 லட்சம் அளவிற்கு சில்லறை விற்பனை செய்யப்பட்டது.
இதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பும் அளித்து வருகிறது. இந்த வருட தீபாவளிக்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கைத்தறி ரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழ்நாடு அரசு அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டு தோறும் 30% சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த பாரம்பரிய மிக்க நெசவுத் தொழிலில் நவீன உக்திகளை கையாண்டு அரிய வேலைப்பாடுகளுடன் எழில் கொஞ்சும் வண்ணக் கலவைகளில் பட்டு மற்றும் கைத்தறி இரக சேலைகள் புதிய வடிவமைப்பிலும் பட்டு மற்றும் பருத்தி புடவைகள் குறைந்த விலையில் நேர்த்தியான வண்ணங்களிலும் உருவாக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், பருத்தி இரக சேலைகளில் டிசைனர் சேலைகள், லுங்கிகள், போர்வைகள், திரைச் சீலைகள், துண்டுகள், கைக்குட்டைகள், வேட்டிகள், ரெடிமேட் சட்டைகள், குர்தீஸ் மற்றும் எண்ணற்ற இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாடிக்கையாளர்களின் அமோக ஆதரவைப் பெற்று வருகிறது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் ஏற்றுமதி இரகங்களான ஏப்ரான், குல்ட் மெத்தைகள், கையுறைகள், டேபுள் மேட், ஸ்கிரின் துணிகள், தலையணை உறையுடன் கூடிய படுக்கை விரிப்புகள் வாடிக்கையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கோ-ஆப்டெக்ஸ் மாதந்திர சேமிப்புத் திட்டத்தில் 48% கூடுதல் பலன் உள்ளதால் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து கோ-ஆப்டெக்ஸ் மாதந்திர சேமிப்புத் திட்டத்தில் உறுப்பினராக இருந்து வருகின்றனர். கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தற்போது www.cooptex.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைன் விற்பனையை செய்து வருகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 30% சிறப்பு தள்ளுபடி அரசு ஊழியர்களுக்கு வட்டியில்லா கடன் விற்பனை வசதியை வழங்குகிறது. அரசு ஊழியர்கள் கடன் விற்பனை வசதியை பயன்படுத்தி தங்களது குடும்பத்திற்கு தேவையான துணி இரகங்களை வாங்கிடவும், மேலும் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து விடுமுறை நாட்களிலும் விற்பனை நிலையம் செயல்படும். அனைவரும் கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளர்களுக்கு உதவிட அன்புடன் கோ-ஆப்டெக்ஸ் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்நிகழ்வில், காஞ்சிபுரம் தொகுதி எம்பி செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ எழிலரசன், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை அரசு முதன்மை செயலாளர் அமுதவல்லி, கைத்தறி துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்) கவிதா ராமு, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார் கைத்தறித் துறை கூடுதல் இயக்குநர் தமிழரசி, கைத்தறி துறை இணை இயக்குநர் கணேசன், கைத்தறிதுறை இணை இயக்குநர்/செயலாட்சியர் (அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்) கிரிதரன், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.