அரசு பள்ளி மாணவர்கள் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் களப்பயணம்
திருப்பூர், ஜூலை 10: திருப்பூர் ஊத்துக்குளி சாலை சர்க்கார்பெரியபாளையம் பகுதியில் அமைந்துள்ளது நஞ்சராயன் பறவைகள் சரணாலயம். இங்கு, உள்நாடு மட்டுமல்லாது வெளிநாட்டு பறவைகளும் வலசை வரும். இந்த சரணாலயத்தில் திருப்பூரை சேர்ந்த பிச்சம்பாளையம், கருப்ப கவுண்டம்பாளையம் மற்றும் பத்மாவதிபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிகளை சேர்ந்த தேசிய பசுமை படை மாணவர்கள் நேற்று களப்பயணம் மேற்கொண்டனர்.
தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமையில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையால் இந்த களப்பயணம் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், திருப்பூர் வனச்சரக அதிகாரி நித்யா மற்றும் திருப்பூர் இயற்கை கழகத்தை சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, களப்பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு பறவைகளின் முக்கியத்துவம் மற்றும் நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரும் பறவைகளின் வகைகள், அவற்றை எவ்வாறு கண்டறிவது, பறவைகளின் வாழ்விடத்தின் தன்மை மற்றும் பறவைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. தொடர்ந்து பறவைகளின் படங்கள் காண்பிக்கப்பட்டு பறவைகளின் பெயர்கள் மற்றும் வகைகள் குறித்து பாடம் எடுக்கப்பட்டது. இதில், வனத்துறை அலுவலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.