தீவன பற்றாக்குறை எதிரொலி; மாட்டுச்சந்தையில் வரத்து குறைந்து விற்பனை மந்தம்
வேலூர், ஏப்.9: கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் கால்நடை தீவன பற்றாக்குறை என்பதால் மாடுகளின் வரத்து பொய்கை மாட்டுச்சந்தையில் குறைந்ததால், விற்பனையும் மந்தமானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் வேலூர் அடுத்த பொய்கையில் நடைபெறும் கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
குறிப்பாக கறவை மாடுகள், ஜெர்சி பசுக்கள், காளைகள், எருமைகள், கோழிகள், ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றுடன் ஆடுகள், கோழிகள் உட்பட பிற கால்நடைகளும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும்.
வழக்கம்போல் நேற்றும் மாட்டுச்சந்தை கூடியது. ஆனால் கறவை மாடுகள், ஜெர்சி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 500 முதல் 650 வரையிலான மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. கோடைக்காலம் என்பதால் தற்போது தீவனப்பற்றாக்குறை நிலவுவதால் கால்நடை வளர்ப்போர் மத்தியில் மாடுகளை வாங்குவதற்கு தயக்கம் காணப்பட்டது. இதனால் விற்பனையும் ரூ.20 லட்சத்துக்கே நடந்தது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, வேலூர் மாவட்டத்தில் கோடைக்காலமான தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் வரும் காலங்களில் தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விற்பனையும் சரிவு கண்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.