கடலில் தவறி விழுந்து மீனவர் உயிரிழப்பு
காரைக்கால், மே 5: காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் படகு உரிமையாளர் முருகானந்தம், காரைக்கால்மேடு பகுதி சேர்ந்த மீனவர் சைந்தவன் (19) உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். மீன் பிடித்துக் கொண்டு கரை திரும்பிய போது கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் படகில் இருந்த மீனவர் சைந்தவன் தவறி விழுந்து மாயமானார். இதனை அடுத்து மாயமான மீனவர் சைந்தவனை பல இடங்களிலும் மீனவர்கள் தேடியும் கிடைக்கவில்லை. சுமார் இரண்டு மணி நேரம் கழித்து திடீரென்று அவரது உடல் உயிரிழந்த நிலையில் காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் கரை ஒதுங்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நகர காவல் நிலைய போலீசார் உயிரிழந்த மீனவர் சைந்தவன் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.