திண்டிவனம் அருகே லாரி மோதி விவசாயி பலி
திண்டிவனம், ஜூலை 10: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவனத்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஏழுமலை(55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தீவனூர்- வந்தவாசி சாலை நடுவனத்தல் கூட்டுச்சாலை ஓரமாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து பழைய இரும்பு ஏற்றிக்கொண்டு உத்திரமேரூருக்கு செஞ்சி அடுத்த கல்லாலிபட்டு கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் மகன் கோவிந்தன்(50) என்பவர் ஓட்டி வந்த லாரி நடந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏழுமலை மீது மோதியது. இதில் லாரியின் சக்கரம் ஏறி ஏழுமலையின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வெளிமேடுபேட்டை போலீசார், ஏழுமலையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.