1.75 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
ஈரோடு, ஆக. 21: ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா, ஈரோடு பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார் மற்றும் போலீசார் அம்மாபேட்டை அருகே சிங்கம்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அப்போது ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பவானி கொரோப்பநாயக்கன்பாளையம் நேதாஜிநகரை சேர்ந்த சக்திவேல் என்பதும், குருவரெட்டியூர், பூதப்பாடி, பூனாச்சி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவரது தகவலின்பேரில் வீட்டில் 900 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சக்திவேலை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மொத்தம் 1.75 டன் ரேஷன் அரிசியையும், காரையும் பறிமுதல் செய்தனர்.