அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் 3வது நாளாக காத்திருப்பு போராட்டம்
ஈரோடு, ஆக. 21: ஈரோட்டில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், மண்டல அலுவலகம் முன் கோரிக்கைகளை வலியுறுத்தி 3வது நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு சென்னிமலை சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) கடந்த 18ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், நேற்று 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் சங்க மண்டல தலைவர் ஜெகநாதன் தலைமை வகித்தார்.
இதில், கடந்த, 1-4-2003ம் ஆண்டுக்கு பின் பணியில் சேர்ந்தோருக்கு பழைய பென்சன் திட்டத்தை அமலாக்க வேண்டும். 24 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வு கால பண பலன்களை உடன் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், பணியில் உள்ள ஊழியர்கள் பெறும் அகவிலைப்படியை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், ஓய்வூதியர்கள், அவர்களது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.