வாய்க்காலில் மூழ்கி முதியவர் பலி
ஈரோடு, அக். 18: ஈரோடு பெருந்துறை வாய்க்கால் மேடு புங்கம்பாடி பகுதியில் ஓடும் கீழ்பவானி வாய்க்காலில் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்த நிலையில் சடலமாக மிதந்து கொண்டிருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில், பெருந்துறை போலீசார், வேப்பம்பாளையம் விஏஓ அன்பழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், இறந்த நபருக்கு சுமார் 60 வயது இருக்கும் என்பதும், வாய்க்காலில் மூழ்கி இறந்திருப்பதும் தெரியவந்தது.
ஆனால், இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. இறந்தவர் மஞ்சள் நிற கோடு போட்ட முழுக்கை சட்டை அணிந்துள்ளார். இதையடுத்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.