ஈரோட்டில் பலத்த மழை
ஈரோடு, செப். 18: தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென் வங்க கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட 19 மாவட்டங்களில் பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், ஈரோடு நகரில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து அவ்வப்போது வெயிலின் தாக்கம் இருந்தது. உஷ்ணம் அதிகளவில் இருந்தது. மதியம் சுமார் 2.30 மணியளவில் வானம் திடீரென இருண்டு கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது.
தொடர்ந்து 3 மணிக்கு லேசான காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இந்த மழை நீடித்தது. இதனால் ஈரோடு, பெருந்துறை ரோடு, நசியனூர் ரோடு உள்ளிட்ட நகரப் பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கி வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நகரின் ஒருசில பகுதிகளில் சுமார் 1.45 மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. தொடர்ந்து விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரத்தின்படி ஈரோடு நகரில் மட்டும் 44 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.