பெண்ணிடம் வழிப்பறி: பழங்குற்றவாளி கைது
ஈரோடு,ஆக.15: ஈரோட்டில் பெண்ணிடம் வழிப்பறி செய்த பெங்களூரை சேர்ந்த பழங்குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். ஈரோடு பழைய பாளையம் இந்திரா காந்தி வீதியை சேர்ந்த சாந்தமூர்த்தி. வியாபாரி. இவர் மனைவி நந்தினி (42). கடந்த ஜூலை 25ம்தேதி வீட்டில் இருந்து பழைய பாளையத்தில் உள்ள மெடிக்கலில் மாத்திரை வாங்கிய பின் ஸ்கூட்டரில் வீட்டுக்கு செல்ல திரும்பினார். அப்போது பின்னால் வேகமாக பைக்கில் வாலிபர் நந்தினி கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறிக்க முயன்றார். இதனை சுதாரித்து கொண்ட நந்தினி, தங்க செயினை இறுக்கி பிடித்து கொண்டார்.
இதில் தங்க செயின் இரண்டு துண்டானது. அதில் கிடைத்த ஒரு பகுதி நகையுடன் அந்த வாலிபர் தப்பினார். இதுகுறித்து நந்தினி அளித்த புகாரின் பேரில் சூரம்பட்டி போலீசார் வழிப்பறி குறித்து வழக்குப்பதிவு செய்தனர். விசாரணையில் பழங்குற்றவாளியான கர்நாடகா மாநிலம் பெங்களூர் ஜெ.பி. நகரைச் சேர்ந்த சந்தோஷ் (35) என்பது தெரிய வந்தது.இதனை தொடர்ந்து போலீசார் பெங்களூரில் வைத்து சந்தோஷயை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து 3 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.