பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர் சந்திப்பு
ஈரோடு, ஆக. 6 : ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் முன்னாள் மாணவர் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த 2000 ம் ஆண்டில் கல்லூரி படிப்பை முடித்த மாணவர் சந்திப்பு, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்தவர்கள், அரசு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளில் உள்ள சுமார் 250 முன்னாள் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து கொண்டனர்.
அப்போது முன்னாள் மாணவர்கள் சார்பில் கல்லூரிக்கு பயிற்சி வாய்ப்புகள், வழிகாட்டுதல் திட்டங்கள், வேலைவாய்ப்பு உதவி, பாடத்திட்ட மேம்பாட்டிற்கு உதவுதல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர். மேலும் முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கிய அவர்கள், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரக்கன்றுகளை விநியோகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தாளாளர் ஏ.கே. இளங்கோ, கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளையின் முன்னாள் செயலாளர் பி.சி. பழனிசாமி, கல்லூரி முன்னாள் தாளாளர் சி.தேவராஜன், முதல்வர் பரமேஸ்வரன், முன்னாள் முதல்வர்கள் நடராஜன், குப்புசுவாமி, பாலுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.