கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி புகார்
கோபி, ஜூலை 24: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள பெரிய கருணாம்பாளையத்தை சேர்ந்தவர் ராமன் மகன் கந்தசாமி (38). எலெக்ட்ரீசியனான இவர் தங்கவேலு என்பவரிடம் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கந்தசாமி, கடந்த 22ம் தேதி உக்கரம் மில் மேட்டில் உள்ள சக்திவேல் வீட்டில் வேலை செய்ய தங்கவேலுவுடன் சென்றுள்ளார்.
மதியம் கந்தசாமி இறந்து விட்டதாக அவரது மனைவி கலாமணிக்கு (31) தகவல் தெரிவித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கலா மணி, தனது கணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தங்கவேலு மற்றும் சக்திவேல் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். கலாமணி அளித்த புகாரின் அடிப்படையில் கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.