பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் ஆன்மிக பயணம் நிறைவு
கோபி, ஜூலை 26: ஈரோடு மாவட்டத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டவர்கள் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலில் பயணத்தை நிறைவு செய்தனர்.ஆடி வெள்ளியை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பெற்ற 5 அம்மன் கோயில்களில் 60 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் ஒரே நாளில் தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்திருந்தது. ஈரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில், பவானியில் செல்லியாண்டியம்மன் கோயில், அந்தியூரில் பத்ரகாளியம்மன் கோயில், சத்தியமங்கலத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் மற்றும் கோபியில் பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு முன்பதிவு செய்த 60 வயதுக்கு மேற்பட்ட 57 பேர் அழைத்து செல்லப்பட்டனர். ஆன்மீக பயணமாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் கோயில்களில் வரிசையில் நிற்காமல் உடனடியாக சாமி தரிசனம் செய்தனர்.இறுதியாக, கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயிலுக்கு வருகை தந்தவர்களை கோயில் செயல் அலுவலர் அனிதா தலைமையில் கோயில் அலுவலர்கள் வரவேற்று சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு கோயில் பிரசாதம், தேநீர், பிஸ்கெட் வழங்கி வழியனுப்பி வைத்தனர். வயது முதிர்ந்த காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை விட அரசு சார்பில் சிறப்பாக அழைத்துச் செல்லப்பட்டு சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுத்த அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.