நெல் கொள்முதல் செய்து ரூ.24.84 லட்சம் மோசடி: மண்டி உரிமையாளர் புகார்
ஈரோடு, ஜூலை 24: தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா மேப்பரிப்பட்டியை சேர்ந்த தானிய மண்டி உரிமையாளர் சென்னகிருஷ்ணன் (41), விசிக மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி தலைமையில் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: எனக்கு தொழில் ரீதியாக ஈரோடு மாவட்டம் சோலார் பகுதியை சேர்ந்த அருண்குமரன் அறிமுகமானார்.
அவர் என்னிடத்தில் வாரந்தோறும் 40 முதல் 50 டன் நெல் தேவைப்படுகிறது. நெல் அனுப்பியதும் பணம் கொடுத்து விடுகிறேன் என உறுதி அளித்தார். அதன்பேரில், கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி முதல் கடந்த ஜூன் மாதம் 30ம் தேதி வரை 24 லோடு வீதம் இதுவரை ரூ.86 லட்சத்து 78 ஆயிரத்து 365 மதிப்பிலான 410 டன் நெல் மூட்டைகளை, அந்த நபர் கூறிய பல்வேறு ரைஸ் மில்களுக்கு அனுப்பி வைத்தேன்.
இதில் ரூ.58 லட்சத்து 64 ஆயிரத்தை காசோலை மூலமாகவும், ரொக்கமாகவும் கொடுத்துள்ளார். ஆனால், கடந்த 8ம் தேதி அருண்குமரன் தொழில் நஷ்டம் ஆகி விட்டதாக கூறினார். மீதமுள்ள ரூ.24 லட்சத்து 84 ஆயிரத்து 565 கடந்த 15ம் தேதி தருவதாக வாக்குறுதி அளித்தார். இதன்பேரில், செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டதற்கு அருண்குமரன் கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, எனக்கு பாதுகாப்பு கொடுத்து, அருண்குமரன் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.