மக்கள் குறைதீர் கூட்டத்தில் 295 மனுக்கள்
ஈரோடு, நவ.11: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட உதவித்தொகைகள் கேட்டும், வீட்டுமனைப்பட்டா, கல்விக்கடன், கலைஞரின் கனவு இல்லம் மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் 295 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றன.
மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் கந்தசாமி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், முதலமைச்சரின் தனிப்பிரிவு, அமைச்சர்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், சமூக பாதுகாப்புத்திட்ட தனித் துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.