பஸ்சின் டயரில் சிக்கி முதியவர் பலி
நாமக்கல், ஜூலை 8: கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் ஸ்டெனீசியஸ் (60). இவர் நேற்று அரசு பஸ்சில் திருச்சிக்கு சென்று கொண்டு இருந்தார். நாமக்கல் புதிய பஸ் ஸ்டாண்டில், பஸ்சில் இருந்து இறங்கி ஸ்டெனீசியஸ் தண்ணீர் பாட்டில் வாங்க சென்றார். அப்போது, நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் தனியார் பஸ் இவர் மீது மோதியது. இதில் பஸ்சின் டயரில் சிக்கிய ஸ்டெனீசியஸ், உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த, நல்லிபாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.