கொளப்பாக்கத்தில் திமுக பொது உறுப்பினர் கூட்டம் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு விரைவில் வீட்டுமனை பட்டா : அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி
கூடுவாஞ்சேரி: காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், வண்டலூர் அருகே கொளப்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு திமுக பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் எம்.டி.லோகநாதன் தலைமையில் நடந்தது. அவைத்தலைவர் ஜேவிஎஸ்.ரங்கநாதன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் குணா, ராஜேந்திரன், பொன்னுசாமி, கருணாகரன், காந்த், பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் ஏ.ஜே.ஆறுமுகம், நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா சீனிவாசன், ஒன்றிய கவுன்சிலர் நேதாஜி ஆகியோர் வரவேற்றனர்.இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர். பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘எல்லா நிர்வாகிகளும் ஒற்றுமையாக பணியாற்றி, வரும் 10 நாட்களுக்குள் பூத் கமிட்டி வேலைகளை முடிக்க வேண்டும். ஏனெனில், கடந்த சட்டமன்றத் தேர்தலை போல் இம்முறை இருக்காது. கடுமையான போட்டி இருக்கும். பாஜவுக்கு அதிமுக அடிமையாகிவிட்டது.
இதனால், நாம் பொதுமக்களை தைரியமாக சந்தித்து, தமிழக முதல்வரின் பல்வேறு சாதனைகளை எடுத்து கூறி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று, மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைப்போம். மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு வழங்குவது பற்றி ஆய்வு நடக்கிறது. அனைவருக்கும் விரைவில் வழங்கப்படும். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களைத் தவிர, பிற வகைப்பாடு நிலங்களில் வசிக்கும் 15 ஆயிரம் குடும்பத்தினருக்கு விரைவில் தமிழக முதல்வர் இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்குவார். செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 ஆயிரம் பேருக்கு நீதிமன்றத்தின் மூலமாக விரைவில் மின் இணைப்பு கிடைக்க வழிவகை செய்யப்படும்’ என்றார்.இதில், திமுக நிர்வாகிகள் ரத்தினமங்கலம் முனுசாமி, ஜான்தினகரன், ராஜன் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கஜலட்சுமி சண்முகம், பவானி கார்த்தி, செல்வசுந்தரி ராஜேந்திரன், நளினி ஜெகன், பகவதி நாகராஜன், ஒன்றியக்குழு துணை தலைவர் ஏவிஎம்.இளங்கோவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.